
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சிறுவன் ஒருவனின் சடலம் பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியான உடங்கா-02 பௌஸ் மாவத்தை பகுதியில், மூன்று வயது மதிக்கத்தக்க முஹம்மத் லுக்மான் என்ற சிறுவன், நீர் குழியிலிருந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (22) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சுமார் 3 மணித்தியாலமாக அப்பகுதியில் காணாமல் போயிருந்த குறித்த சிறுவனை பொதுமக்களுடன் இணைந்து பொலிஸாரும் தேடிய நிலையில் அச்சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாதுகாப்பற்ற நீர்க்குழிக்குள் இருந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
அத்துடன் இச்சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற CCTV காணொளி ஒன்றில் இனம் தெரியாத நபர் உயிரிழந்த சிறுவனை அழைத்துச் செல்லும் காட்சி ஒன்றும் பதிவாகியுள்ளது.
எனினும் சிறுவனை யார் அழைத்து செல்கின்றார்கள் என்பது தொடர்பில் தெளிவாக அடையாளம் காண முடியவில்லை.
அத்துடன் குறித்த பாதுகாப்பற்ற நீர் குழிக்குள் சிறுவன் எப்படி விழுந்தார் என்பது குறித்தும் குழப்பமான ஒரு நிலை காணப்படுகின்றது.
சிறுவனின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச. ஜெயலத் தலைமையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.