
திருத்தந்தை புனித பிரான்ஸிஸின் இறுதி ஆராதனை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் விஜித ஹேரத் கலந்துகொள்வார் என வௌிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
திருத்தந்தை புனித பிரான்ஸிஸின் இறுதி ஆராதனை நாளை (ஏப்ரல் 26) காலை 10:00 மணிக்கு (உள்ளூர் நேரம்) புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் (St. Peter’s Square) நடைபெறவுள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் விஜித ஹேரத் இன்று காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து எதிஹாட் விமான சேவைக்கு சொந்தமான விமானம் மூலம் அமைச்சர் அபுதாபி விமான நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம் வத்திக்கானுக்கு பயணிக்க உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் திருத்தந்தை புனித பிரான்ஸிஸின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் ஹெக்டர் அப்புஹாமி ஆகியோர் நேற்று மாலை வத்திக்கானுக்கு பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் திருத்தந்தை புனித பிரான்ஸிஸின் இறுதி ஆராதனை நடைபெறும் நாளைய தினம் (26) ஆனது தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.