
மட்டக்களப்பு கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் மாணவி ஒருவர் வகுப்பறையில் மயங்கி வீழ்ந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கிரான்குளம், பிரிவு 8 அமரசிங்க வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய இராஜன் வினோஜினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த மாணவி க.பொ.த சாதாரண தரத்தில் கல்விகற்றுவருபவர் ஆவார்.
இன்றையதினம் (25) பகல் 12.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி வழமைபோல இன்று பாடசாலைக்கு சென்று கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த நிலையில் வகுப்பறையில் திடீரென மயங்கி வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து மாணவியை செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பின்னர் அங்கிருந்து களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் சடலம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ள நீதிமன்ற அனுமதியை பெறும் நடவடிக்கையை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.