
பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தனது கடமைகளில் இருந்து தவறியுள்ளார் என்றும், இதனால் அவர் தமது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
சட்டம் மற்றும் ஒழுங்குக்குப் பொறுப்பான அமைச்சர் தனது பொறுப்புகளை சரியாக நிறைவேற்றவில்லை.
எந்தவொரு அமைச்சரும் பதவியேற்கும் போது தனக்கு ஒதுக்கப்படும் கடமைகளை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கின்றனர். அதன் பிரகாரம்தான் அவருக்கான நிறுவனங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படுகின்றன.
தனது அமைச்சின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் திறம்பட நிர்வகிப்பது அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் பொறுப்பு. ஆனால் அமைச்சர் இந்தக் கடமைகளில் தோல்வியடைந்துள்ளார். ஆகவே அவர் பதவி விலக வேண்டும்.
கடந்த சில வாரங்களில் 31 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நாட்டில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அரசியல் ஆர்வலர்கள் உட்பட பொது மக்களும் ஆபத்தான விகிதத்தில் கொல்லப்படுகின்றனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) செயற்பாட்டாளர் டான் பிரியசாத்தின் கொலைக்கு ஐஜிபி உட்பட மூத்த அதிகாரிகளே பொறுப்பு.
இடம்பெறும் தொடர் கொலைகளில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு பொறுப்புக்கூற வேண்டிய பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தனது கடமைகளில் இருந்து தவறியுள்ளார். ஆகவே அவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.
ஹெல்மெட் அணிந்திருக்கும் ஒவ்வொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரையும் சோதனைக்கு உட்படுத்துவது குற்றங்களைத் தடுப்பதற்கான ஒரு பயனுள்ள வழியாக இருக்காது என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.