
‘நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி, ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, நாட்டை மேம்படுத்துவதே எமது இலக்கு’ என என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் நேற்று (01) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய வேளையில் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உழைக்கும் மக்கள் உட்பட எமது நாட்டு மக்கள் கண்ட கனவுகள் நனவாகும் யுகம் உருவாகியுள்ளது. மக்களுக்கான மக்களாட்சியை முன்னெடுக்கும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது.
நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்தி, ஒற்றுமையைக் கட்டியெழுப்பி, நாட்டை மேம்படுத்துவதே எமது இலக்கு.
அந்த குறிக்கோளை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருக்கையில் ஒரு சில கயவர்கள், ஒரு சில தீயவர்கள் தமது பழைய நோக்கங்களுக்காக மக்களை பிரிக்க முற்படுகின்றனர். இதற்கு மக்கள் இடமளிக்கமாட்டார்கள். அவர்களின் நோக்கமும் நிறைவேறாது.
76 வருடங்களாக இந்த நாட்டை நாசமாக்கிய கும்பல் மீண்டும் பழைய அரசியலை முன்னெடுக்கப் பார்க்கின்றது. அதற்கு இடமளிக்கப்படமாட்டாது.
முந்தைய அரசாங்கத்தில் மலையக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என தொடர்ச்சியாக கூறிவந்தன. ஆனால் தேர்தல் காலங்களில் மட்டும் அம்மக்கள் பகடைகளாகப் பயன்படுத்தப்பட்டனர்.
அம்மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படவில்லை.
நாம் ஆட்சிக்கு வந்த பிறகு தோட்டத் தொழிலாளர்கள் உட்பட மலையக மக்கள் தொடர்பில் கவனம் செலுத்திவருகின்றோம் எனத் தெரிவித்திருந்தார்.