
மன்னார் – யாழ் பிரதான வீதி, கள்ளியடி பகுதியில் இன்று (3) காலை இடம்பெற்ற விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
மன்னாரில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் கடமையாற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று, கள்ளியடி பகுதியில் பணியாளர்களை ஏற்றுவதற்காக வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதன் போது குறித்த பேருந்துக்கு நேர் எதிரே அதிவேகமாக வந்த லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துடன் மோதியதுடன், குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த ஒருவர் மீதும் மோதி பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் போது மோட்டார் சைக்கிளுடன் நின்ற நபர் காயமடைந்ததுடன், அவரது மோட்டார் சைக்கிளும் பலத்த சேதமடைந்துள்ளது.
குறித்த விபத்தில் கொள்கலன் லொறியின் சாரதி, உதவியாளர் ஆகிய இருவர் மற்றும் ஆடை தொழிற்சாலை பணியாளர்கள் 09 பேரும் காயமடைந்துள்ளதுடன், அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இலுப்பைக்கடவை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.