
சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவன் சரித் தில்ஷானின் மரணம் தொடர்பில், 04 பேர் குற்றப் புலனாய்வுத் துறையினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பம் பொறியியல் பீடத்தில் கல்வி பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவரான சரித் தில்ஷான், கடந்த 29ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்து கொண்டார்.
மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக அவர் கடிதம் எழுதியிருந்தாலும், பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட பகிடிவதையை தாங்க முடியாமல் சரித் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் குற்றம் சாட்டினர்.
இந்நிலையில், கடந்த முதலாம் திகதி பல்கலைக்கழகத்தின் மற்றொரு மாணவர் பகிடிவதைக்கு ஆளானதாகக் கூறி சமனல வேவா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டை தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை (மே 2) சமனல வேவா பொலிஸ் நிலையம், பகிடிவதைக்கு ஆளானதாகக் கூறப்படும் 20 பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்தது.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்கல்வி அமைச்சு கடந்த வெள்ளிக்கிழமை (02) அறிக்கை ஒன்றை வெளியிட்டு, இந்த விடயம் குறித்து முழுமையான விசாரணை நடாத்த ஒரு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அறிக்கை கிடைத்தவுடன் சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
சரித் தில்ஷான் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் பகிடிவதை சம்பவம் தொடர்பான விசாரணை, கடந்த மூன்றாம் திகதி பதில் பொலிஸ்மா அதிபரின் (IGP) அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைக்கப்பட்டது.
விசாரணைகளைத் தொடர்ந்த குற்றப் புலனாய்வுத் துறையினர், சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடாத்துவதற்காக சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் நான்கு பேரை கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.