பாலியல் இலஞ்சம் கோரிய அரச அதிகாரிக்கு 20 வருட கடூழிய சிறைத்தண்டனை!

ஏழு வயது குழந்தையின் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காக அரசாங்கத்திடமிருந்து வழங்கப்படும் நிதியுதவியைப் பெறுவதற்கு தேவையான அனுமதியை வழங்குவதற்காக, 30 வயது மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரிய திவி நெகும சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

எனினும், இந்த சிறைத்தண்டனை 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று, தீர்ப்பை வழங்கிய கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவிட்டார்.

இதுதவிர, பிரதிவாதியின் வாக்குரிமை உட்பட சிவில் உரிமைகள் ரத்து செய்யப்படுவதாகவும் இதனை தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன் பிரதிவாதிக்கு 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி, அரச உத்தியோகத்தராக இருந்து கொண்டு, இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பாலியல் இலஞ்சம் கோரியது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டார். இந்தக் குற்றத்தின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு லேசான தண்டனை விதிக்க முடியாது என்றும் அதன்படி இந்தத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தெரிவித்தார்.

2015 மார்ச் 31 அன்று சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட தனது ஏழு வயது குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய அரசாங்கத்தின் நிதியுதவியைப் பெறுவதற்கு அனுமதி வழங்குவதற்காக, மூன்று குழந்தைகளின் தாயிடம் பாலியல் இலஞ்சம் கோரி அவரை திஸ்ஸமஹாராம பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்துச் சென்றபோது, பிரதிவாதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், இந்த சந்தேக நபருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

நீண்ட விசாரணைகளுக்குப் பிறகு தீர்ப்பை வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி, முறைப்பாட்டாளரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக உத்தரவிட்டார்.

அதன்படி, இந்தத் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply