
முன்னாள் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் பிள்ளையான், ஏப்ரல் 8ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையால் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டதன் சட்டப்பூர்வத்தன்மையை எதிர்த்து அவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவின் ஊடாக தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என்று அறிவிக்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதுடன், தனது அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்காக 100 மில்லியன் ரூபா இழப்பீடும் கோரியுள்ளார்.
அத்துடன் தனது கைது நடவடிக்கையானது அரசியல் நோக்கம் கொண்டது என்றும் போதுமான சட்ட அடிப்படை இல்லை என்றும் பிள்ளையான் வலியுறுத்துகிறார்.
எனவே குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நடவடிக்கைகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று சுட்டிக்காட்டிய பிள்ளையான், இந்த அடிப்படை உரிமை மீறலை உறுதிப்படுத்தும், அதேவேளை, அடிப்படை உரிமைகளை மீறியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டிற்காக 100 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிள்ளையான் கைது செய்யப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பகிரங்கமாக வெளியிடவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.