
நீண்ட தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியமைக்கு அமைவாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளை பரிசோதிக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்றையதினம் (16) ஹட்டனில் இருந்து நீண்ட தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகள் கினிகத்தேன பொலிஸாரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் உள்ள கினிகத்தேனவின் அம்பகமுவ பகுதியில் நீண்ட தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் குறைபாடுகளுடன் இயக்கப்பட்ட ஐந்து இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள், ஆறு தனியார் பேருந்துகள் உட்பட 11 சாரதிகள் மீது ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பேருந்து சாரதிகளுக்கு குறைபாடுகளை சரிசெய்ய உத்தரவுகள் வழங்கப்பட்டன.
குறித்த பேருந்து பரிசோதனை நடவடிக்கையின் போது, பயணிகளை விழிப்புணர்வு செய்யும் வகையில் பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்தனர். அதன்படி, பேருந்து சாரதிகள் போக்குவரத்து விதிகளை மீறுவது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.