
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக எம்.ஏ. சுமந்திரன் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராக உள்ள சிவஞானம் சிறீதரன் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடமாட்டார் என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தான் போட்டியிடவுள்ளார் என்று சுமந்திரன் கூறியுள்ளார்.
உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் தலைவர்கள் நேற்று யாழ். நல்லூரில் உள்ள சுமந்திரனின் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர்.
இதன்போது அடுத்துவர உள்ள மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராகத் தானே களமிறங்கப் போகின்றார் என்று சுமந்திரன் கூறியதாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத்தலைவர்களில் ஒருவரான த.சித்தார்த்தன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.