
மின்கட்டணத்தை 18.3 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, (PUCSL) ஜூன் முதல் வாரத்தில் இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
மின்கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனையை இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் இடைக்கால நிதி அறிக்கையில், 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 18 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
2023ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிலிருந்து தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளுக்கு லாபம் ஈட்டிய பின்னர், பதிவான முதல் இழப்பீடு இதுவெனவும், கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 44 வீதம் வருவாய் குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஜனவரி 17 ஆம் திகதி, இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கமைய மின்சாரக் கட்டணக் குறைப்பு அமுல்படுத்தப்பட்டது. இந்த 20% கட்டணக் குறைப்பு 2025 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்கு பொருந்தும்.
அடுத்த மின்சாரக் கட்டணத் திருத்தம் அடுத்த மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ளதுடன், எரிசக்தி நிபுணர்கள் சுமார் 15% மின்கட்டண அதிகரிப்பை எதிர்பார்க்கின்றமை குறிப்பிடத்தக்கது.