
120 மில்லியன் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இலங்கை பெண்கள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (19) இரவு இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
கொலன்னாவை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய தாய், அவரது 18 வயதுடைய மகள், வெள்ளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய வர்த்தகப் பெண் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் குறித்த போதைப்பொருள் தொகையை தாய்லாந்தில் இருந்து வாங்கி, காற்றுச்சீரமைப்பு மற்றும் மின்சார உணவு தயாரிப்பு உபகரணங்கள் 7இல் நுணுக்கமாக மறைத்து, இந்தியாவின் சென்னை நகருக்கு வந்து, பின்னர் அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அத்துடன் இந்த மூன்று பெண்களும் இதற்கு முன்பும் பல தடவைகள் இவ்வாறு மின்சார உபகரணங்களை எடுத்து வந்துள்ளதை சுங்க அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையுடன், அவற்றை எடுத்து வந்த மூன்று பெண்களும் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.