
கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியின் அதிபர் கல்வி அமைச்சுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.
கொழும்பிலுள்ள குறித்த பிரபல பாடசாலையில் கல்வி பயின்றுவந்த 16 வயதுடைய மாணவி அம்ஷிகா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில், இந்த இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த பாடசாலைக்கு தற்போது புதிய அதிபர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு குறித்த மாணவி கொழும்பு இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியில் கல்வி பயின்ற வேளையில், அந்தப் பாடசாலையின் கணித ஆசிரியரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் அடிப்படையில் அதிபர் அமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
ஆசிரியரால் துஷ்பிரயோகத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவி அண்மையில் உயரமான கட்டிடம் ஒன்றில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மாணவிக்கு நீதி கோரி போராட்டங்கள் நடாத்தப்பட்டது.
மாணவியின் மரணம் தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், விசாரணைகளை மேற்கொள்ள மூன்று பேர் கொண்ட விசாராணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
எனினும் தற்போது விசாரணைகள் ஜூன் 23ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியரும் இப்போது கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.