
யாழ்ப்பாணம் – வரணிப்பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் மீது கொடிகாமம் பொலிஸார் இன்றைய தினம் (20) துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர்.
பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணல் பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை எழுதுமட்டுவாள் பகுதியில் கடமையிலிருந்த கொடிகாமம் பொலிஸார் நிறுத்த முயற்சித்த போது குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தாது கொடிகாமம் பகுதியை நோக்கி தப்பியோடியது.
இதையடுத்து பொலிஸார் குறித்த டிப்பர்வாகனத்தை தமது வாகனத்தில் துரத்திச் சென்றனர்.
எனினும் டிப்பர் வாகனம் வரணி மந்துவில் வீதியால் திரும்பிச் சென்று வேம்பிராய் நோக்கி மிக வேகமாகத் தப்பியோடிய போது, பொலிஸாரின் வாகனத்தை நோக்கி டார்ச் லைற் மூலம் பிரகாசமான ஒளியை பாய்ச்சியிருந்தனர்.
இதன்போது தமது வாகனத்தை செலுத்த முடியாத நிலையில் பொலிஸார் டிப்பார் வாகனத்தின் ரயர்களை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தியிருந்தனர்.
இந்த நிலையில் குறித்த டிப்பர் வாகனத்தை நிறுத்திவிட்டு சாரதி உட்பட இரண்டு சந்தேக நபர்கள் தப்பித்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சட்டவிரோத மணலுடன் சென்ற டிப்பர் வாகனத்தை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியதுடன், தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.