
அரசியல் பிரமுகர்கள் பலர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என்ற புலனாய்வுத் தகவல் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்றைய (20) நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் குறிப்பிடுகையில்,
முன்னாள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் மற்றும் தற்போதைய பிராந்திய அரசியல் பிரமுகர்கள் 10 சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் நேரடி தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என்றும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அதிக குற்றங்கள் நிகழும் 52 காவல் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குற்றவாளிகளைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது தீவு முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், இரவு நேரத்தில் நடமாடும் ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அத்துடன் அவசரகால சாலைத் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களைத் தடுக்கவும், சம்பந்தப்பட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் ஒரு சிறப்பு நடவடிக்கைப் பிரிவு நிறுவப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.