
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முயன்ற பெண் அகதி ஒருவர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூரை சேர்ந்த 36 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் இலங்கை வருவதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் சென்ற நிலையில், அவரது ஆவணங்களை குடியகல்வு அதிகாரிகள் சோதனை செய்த போது அவை போலி என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் தொடர்பாக முன்னெடுத்த முதற்கட்ட விசாரணையின் போது,
அவர் கடந்த 1998-ம் ஆண்டு கிளிநொச்சியிலிருந்து படகு மூலமாக தமிழ்நாட்டிற்கு சென்று இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் முகாமில் பகுதியில் தங்கியிருந்தமை தெரியவந்துள்ளது.
பின்னர் அங்கிருந்து குடும்பத்துடன் புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்திற்கு குடிபெயர்ந்துள்ளார்.
2019-ம் ஆண்டு மேற்கண்ட திருமயம் முகவரியில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து போலி கடவுச்சீட்டை பெற்றமை தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக குடியகல்வு பிரிவு அதிகாரிகள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விமான நிலைய பொலிஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
மேலும் அவர் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்துள்ளனர்.