
நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க கருத்து தெரிவிக்கையில்,
வைத்தியசாலைகளில் அதிக எண்ணிக்கையிலான மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது.
கடந்த ஏப்ரல் மாத இறுதிக்குள், வைத்திய விநியோகப் பிரிவில் சுமார் 180 வகையான மருந்துகளும், வைத்தியசாலை அமைப்பில் சுமார் 50 வகையான மருந்துகளும் கையிருப்பில் இல்லை.
இதனைவிட நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கின்றது. காரணம் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வலி நிவாரணிகள் மற்றும் இன்சுலின் போன்றவற்றில் பிரச்சினை இருப்பதாக எங்களுக்குக் தகவல்கள் கிடைக்கின்றன.
இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்காக வழங்கப்படும் சில உபகரணங்களின் பிரச்சினைகள் என்பவற்றை ஒட்டுமொத்தமாக வைத்தியசாலை அமைப்பு போன்று பிராந்திய ரீதியாகவும் காண்கிறோம்.
சில மருந்துப் பற்றாக்குறைகள் வைத்தியசாலை அமைப்பிலேயே உள்ளன என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், நாளையதினம் நாடு முழுவதும் பல கோரிக்கைகளை முன்வைத்து அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுநர்களின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
மேற்குறித்த பிரச்சினை தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக கலந்துரையாடுவதற்கு எதிர்பார்த்திருந்த போதிலும், சுகாதார அமைச்சு அதற்கு ஏற்பாடு செய்யாத காரணத்தினாலும், இந்த விடயம் தொடர்பில் அவர்கள் தலையிடாத காரணத்தினாலும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டியதாயிற்று என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி நாளை காலை 8.00 மணிக்கு வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இந்த வேலைநிறுத்தத்திற்கு சுகாதார அமைச்சர், பொது சேவை ஆணைக்குழு மற்றும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.