யாழில் தனியார் பேருந்து சாரதிகள் போராட்டம்!

யாழ். 769 வழித்தட சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் இன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் தெரியவருவது,

யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து புறப்படும் 764 வழித்தட பேருந்துகள், கடந்த காலங்களில் வசாவிளான் சந்தியில் இருந்து, பருத்தித்துறை – பொன்னாலை வீதி வரையிலான பலாலி வீதி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் காணப்பட்டமையால், வசாவிளான் சந்தியுடன் தமது சேவைகளை மட்டுப்படுத்தி இருந்தன.

அதனால் மயிலிட்டி பகுதியில் வசிக்கும் மக்களின் நலன்கருதி , யாழ்ப்பாண நகரில் இருந்து புறப்படும் 769 வழித்தட பேருந்துகள் மயிலிட்டி வரையில் சேவையில் ஈடுபட்டது.

தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் பலாலி வீதி திறக்கப்பட்டுள்ளமையால், யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 764 வழித்தட பேருந்துகள் யாழ்ப்பாண நகரில் இருந்து புறப்பட்டு பலாலி வீதியூடாக பருத்தித்துறை பொன்னாலை வீதியை அடைந்து அதனூடாக காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையம் வரையில் சேவையில் ஈடுபடுகிறது.

அதேபோன்று காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைகிறது.

இந்நிலையில் 769 வழித்தட அனுமதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் தாம் இதுவரை காலமும் மயிலிட்டியில் இருந்து சேவையை ஆரம்பித்தது போன்று ஆரம்பிக்கவும் , யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு , காங்கேசன்துறை வீதி வழியாக மயிலிட்டி வரையில் சேவையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மாதம் 30ஆம் திகதி வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் தனியார் பேருந்து சேவை வழித்தடம் தொடர்பான கூட்டம் இடம்பெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எனவே குறித்த விடயம் தொடர்பாக, ஆளுநர் போராட்ட இடத்திற்கு வருமாறுகோரி சாரதிகள் நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply