வடக்கு மக்களின் காணிகளை சுவீகரிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை- அமைச்சர் பிமல் ரத்நாயக்க!

வடக்கு மக்களின் காணிகளை சுவீகரிக்கும் திட்டம் அரசாங்கத்துக்கு இல்லை என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கரையோர பகுதிகளிலுள்ள காணிகளை சுவீகரிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் உடன் மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேற்று சபை ஒத்திவைப்பு வேளையில் பிரேரணையை முன்வைத்ததுடன், மேற்படி வர்த்தமானி அறிவித்தல் மீளப்பெறப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருந்தார்.

இந்த விவாதத்தின் போது அமைச்சர் பிமல் ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில்,

மக்களுக்குரிய காணிகளை சுவீகரிப்பதற்குரிய எந்தவொரு தேவைப்பாடும் அரசாங்கத்துக்கு கிடையாது. வடக்கில் எமக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். வடக்கு மக்களும் எமது பக்கம் உள்ளனர். எனவே அங்குள்ள மக்களின் காணியை பறித்து வேறு நபர்களுக்கு வழங்கவேண்டிய தேவைப்பாடு எமக்கு கிடையாது. வேறு நபர்களை குடியேற்ற வேண்டிய தேவைப்பாடும் எமக்கு கிடையாது என்று குறிப்பிட்டார்.

அத்துடன் ராஜபக்சக்கள், ரணில்களை பார்த்தது போல எம்மையும் சந்தேக பார்வையுடன் பார்க்க வேண்டாம். தேர்தல் காலங்களில் வேண்டுமானால் அரசியல் நடத்துங்கள் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை இவ்விவாதத்தில் உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகரன்,

வடக்கு, கிழக்கில் மட்டும் அல்ல, நாடு முழுவதும் உள்ள காணிகள் சரியாக இனங்காணப்பட்டு நிர்ணயம் செய்துகொள்ள வேண்டிய தேவை நாட்டுக்கு உள்ளது. அவ்வாறான நடவடிக்கையே இது.

வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற காணி பிணக்கால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றை நாம் தீர்க்க வேண்டும்.

எனவே, காணியை நிர்ணயிப்பதற்கான நடவடிக்கையே இது. மக்களின் காணியை சுவீகரிப்பது இதன் நோக்கம் அல்ல என்று சபையில் சுட்டிக்காட்டினார்.

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply