அனுராதபுரம் பெண் வைத்தியர் விவகாரம்- சந்தேகநபரின் வாக்குமூலம்!

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரர் நேற்றையதினம் (21) நீதிமன்றத்திற்கு தனது வாக்குமூலங்களை வழங்கியுள்ளார்.

குறித்த வழக்கு அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்க அனுமதி வழங்கப்பட்ட போதே முன்னாள் இராணுவ வீரர் இவ்வாறு சாட்சியமளித்தார்.

பெண் மருத்துவதை தான் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தவில்லை என்றும், அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் இரண்டாவது வாயிலிலிருந்து மருத்துவர் தங்கும் விடுதி வரையிலான சாலையின் இருபுறமும் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்வதன் மூலம் இதை உறுதிப்படுத்த முடியும் என்றும் சந்தேக நபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரின் இந்தக் கூற்றை கவனத்தில் கொண்ட அனுராதபுரம் தலைமை நீதவான், சந்தேக நபரின் இந்த வாக்குமூலம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட வேண்டும் என அனுராதபுரம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் இந்தக் குற்றச் செயல் தொடர்பாக தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் இராணுவ வீரரை இம்மாதம் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறும் பிரதான நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply