
யாழ். தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் யுவதி ஒரு கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
யாழ்ப்பாணம் – பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த 22 வயது யுவதியும், பூநகரி கௌதாரிமுனை பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞனும் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.
பெண் வீட்டாருக்கு பயந்து இருவரும் தலைமறைவாக இருந்துள்ளனர்.
பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்த இருவரும் இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இதன்போது பெண் வீட்டார், குறித்த யுவதியை இளைஞனிடம் இருந்து பிரிப்பதற்கு முயற்சி செய்தனர்.
எனினும் இருவருக்கும் 18 வயது நிறைவடைந்தமையாலும், இருவரும் பிரிவதற்கு விருப்பம் தெரிவிக்காத காரணத்தினாலும் அவர்களை பிரிக்க முடியாது என இளவாலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பெண் வீட்டாரின் கட்டாயத்தின் பேரில் இந்த வழக்கு மல்லாகம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
வழக்கை விசாரித்த மல்லாகம் நீதிமன்றம், இருவருக்கும் திருமண வயது வந்துவிட்டதால் அவர்களை பிரிக்க முடியாது என்றும், அவர்களது விருப்பம் போல சேர்ந்து வாழ முடியும் என்றும் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், வழக்கு நிறைவடைந்து வரும்போது பெண்ணின் சகோதரன் உள்ளிட்ட சிலர் அடங்கிய குழுவினர் குறித்த இளைஞனை தாக்கிவிட்டு, யுவதியை வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
காயமடைந்த இளைஞன் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த யுவதியை தேடும் நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
யுவதியை கடத்திச் செல்லும் காணொளியானது அந்த பகுதியில் காணப்படும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.