
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் எதிர்வரும் ஜூன் 24ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியின் போதே அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அவர் குறிப்பிட்ட விடயமாவது,
போர் முடிவடைந்த பிறகு புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிப்பதற்குரிய யோசனையை நாம் முன்வைத்தோம், வடக்கு, கிழக்கை கட்டியெழுப்புவதற்குரிய செயலணி யோசனையும் முன்வைக்கப்பட்டது. ஆனால் அவை அமுலுக்கு வரவில்லை.
அரசியல் ரீதியில் தற்போது வங்குரோத்தடைந்துள்ள தரப்பினரே தமக்கு புத்துயிர் அளிப்பதற்கு போரை பயன்படுத்த முற்படுகின்றனர்.
தற்போது சமாதானமே முக்கியம். அதனை செய்வதற்கு நாம் முன்வரவேண்டும். அந்த இலக்கை நோக்கியே நாம் பயணித்துக்கொண்டுள்ளோம்.
தேசிய பொறிமுறை ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் என நாம் உறுதியளித்துள்ளோம். அதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே, இனவாதம் பேசினால் அது நல்லிணக்க முயற்சிக்கு தடையாக அமையும்.
மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் ஜூன் 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகைதர உள்ளார்.
இங்கு அவர், பிரதேசங்கள் மற்றும் நிறுவனங்களை கண்காணிப்பார். அதன் அடிப்படையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
அந்த சவாலுக்கும் நாம் முகங்கொடுக்க வேண்டும். ஐ. நா. மனித உரிமைகள் பேரவை தலையிட்டாலும் – தலையிடா விட்டாலும்கூட தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பு எமக்கு உள்ளது என்று தெரிவித்திருந்தார்.