
கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் அரச பேருந்து ஒன்று லொறியுடன் மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில் கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் வெலிஹார பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது பேருந்தில் பயணித்த 12 பயணிகளும், டிப்பர் லொறியின் ஓட்டுநரும் காயமடைந்து தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பயணி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், அவரின் சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.