
க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பில் மாணவிக்கு அறிவிக்க சென்ற அதிபர், ஆசிரியர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்திய சம்பவம் அக்கரைப்பற்றில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவது,
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள பாடசாலையில் கல்வி கற்றுவரும் க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கான விசேட பயிற்சி செயலமர்வு ஒன்று தம்பட்டை பிரதேசத்தில் இன்று நடைபெற இருந்தது.
இந்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபரின் உத்தரவுக்கமைய மாணவர்களின் வீட்டிற்கு சென்று அறிவிப்பதாக முடிவு செய்யப்பட்டது.
அதன்படி விசேட பயிற்சி செயலமர்வு தொடர்பில் அறிவிப்பதற்காக சம்பவதினமான நேற்று (23) மாலை குறித்த ஆசிரியர், மாணவி ஒருவரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மாணவிக்கு அறிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேற முற்பட்டபோது வீட்டில் சத்தம் கேட்ட நிலையில், வீட்டில் இருந்து வெளியில் வந்த மாணவியின் சகோதரன் ஆசிரியரை வாளால் வெட்டி தாக்கியதுடன் மோட்டார் சைக்கிளை அடித்து உடைத்துள்ளார்.
இதனையடுத்து அசிரியர் தனக்கு நேர்ந்த கதியை அதிபருக்கு தெரிவித்ததையடுத்து அதிபர் அங்கு சென்று ஆசிரியரை காப்பாற்ற முற்பட்டபோது, மாணவியின் சகோதரன் அதிபர் மீதும் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியதுடன் அவரது மோட்டார் சைக்கிளையும் அடித்து உடைத்துள்ளார்.
சம்பவத்தை அடுத்து வாள்வெட்டு தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தின் போது குறித்த நபர் மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.