துணை வைத்திய சேவைகளைச் சேர்ந்த ஆய்வக விஞ்ஞானிகள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்கள் இன்று (27) காலை 8 மணி முதல் வேலை நிறுத்த போரட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இணை சுகாதார பட்டதாரிகளுக்கு ஏற்பட்ட அநீதி, பதவி உயர்வு பிரச்சினைகள் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தமது பிரச்சினைக்கு தீர்வை வழங்காது விடின் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து நடாத்துவோம் என துணை வைத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.
அத்துடன் துணை வைத்திய சேவைகளைச் சேர்ந்த மற்ற தொழிற்சங்கங்களும் குறித்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க முடிவு செய்துள்ளதாகவும் சானக தர்மவிக்ரம குறிப்பிட்டார்.
இதற்கிடையில், வைத்தியர்களின் கூடுதல் பணி மற்றும் விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவுகளை குறைப்பது தொடர்பான சரியான சுற்றறிக்கையை ஒரு வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இல்லையெனில் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தள்ளப்படுவோம் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
