இலங்கையின் சில பகுதிகளில் தற்போது சிக்குன்குன்யா நோய் பரவும் அபாயம் உள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
சிக்குன்குன்யா நோய் 2006, 2007 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் இலங்கையில் குறிப்பிடத்தக்களவில் பரவியதாக குறிப்பிட்ட தொற்று நோய் நிபுணர் வைத்தியர் சிந்தன பெரேரா, தற்போது கொழும்பு மாவட்டத்தில் கடுவெல, கொதடுவை, பத்தரமுல்லை ஆகிய பகுதிகளிலும், கம்பஹா மாவட்டத்தில் மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதிகளிலும் இந்த நோய் அதிகமாக பரவியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
சிக்குன்குன்யா நோய்க்கு காரணமான வைரஸ், டெங்கு நுளம்பின் மூலமே பரவுவதாகவும், இது ஒரு நோயாளியிடமிருந்து மற்றொரு நோயாளிக்கு பரவாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நோயின் அறிகுறிகளாக காய்ச்சல், உடல் வலி, உடல் நடுக்கம், மூட்டு வலி மற்றும் மூட்டுகளில் வீக்கம் ஆகியவை காணப்படுகின்றன.
பெரும்பாலான நோயாளிகளுக்கு சில நாட்களுக்குள் இந்த நோய் குணமடைந்தாலும், சிலருக்கு மூட்டு வலி சிறிது காலம் நீடிக்கும் எனவும் வைத்தியர் தெரிவித்தார்.
கர்ப்பிணி தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நோயிலிருந்து பாதுகாப்பாக இருப்பது முக்கியம் எனவும் வைத்தியர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
