
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் இந்த விடயம் தொடர்பில் எடுத்துரைத்தார்.
அதாவது, நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்றுவரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன்சார்ந்து வலுப்பெற வேண்டுமென எம்.பி சிறீதரன் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகருடன் நேற்று (27) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின் போது ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ், அவரது துணைவியார் கிரிட்டினா ஸ்டீபன்ஸ், திட்ட ஒத்துழைப்புக்கான முதல் செயலாளர், திருமதி ஜோ கிட், அரசியல் துறைக்கான இரண்டாவது செயலாளர் திரு. மேத்யூ லார்ட் மற்றும் மூத்த ஆராய்ச்சி அதிகாரி திரு. சில்வெஸ்டர் வொர்திங்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது தற்போதைய இலங்கை அரசின் மாற்றம், ஜனாதிபதி தேர்தல் முதல் உள்ளூராட்சி தேர்தல் வரையிலான அரசியல் நிலவரங்களில் குறித்து உயர்ஸ்தானிகரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அத்துடன் வடக்கு மற்றும் கிழக்கு தொடர்பான நிலப் பிரச்சினைகள், வடக்கு மாகாணத்தில் சுமார் 6000 ஏக்கர் கடலோர நிலங்களை அரசு நிலங்களாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவிப்பு குறித்தும், தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வாக வடக்கு மற்றும் கிழக்கில் நிலங்கள், காவல்துறை மற்றும் நிதி ஆகியவற்றில் மீளமுடியாத அதிகாரங்களைக் கொண்ட சமஸ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு நிறுவப்பட வேண்டும் என்ற பல விடயங்களை நாடாளுமன்ற உறுப்ப்பினர் சிறீதரன் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.