திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா தெரிவு!

திருகோணமலை மாநகர சபையின் மேயராக கந்தசாமி செல்வராசா (சுப்ரா) தெரிவு செய்யப்பட்டுள்ளார் என இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருகோணமலை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்டக் குழுத் தலைவருமான சண்முகம் குகதாசன் இந்தத் தீர்மானம் தொடர்பில் தெரிவித்தார்.

சபைக்காகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு இந்தத் தெரிவானது ஜனநாயக முறையில் வாக்கெடுப்பின் மூலம் இடம்பெற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதலாவது திருகோணமலை மாநகர சபைக்காக இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் 9 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தி சார்பாக 6 உறுப்பினர்களும், ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பாக 4 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 3 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இரண்டு சுயேச்சைக் குழுக்கள் சார்பாக தலா ஒரு உறுப்பினர்களுமாக மொத்தமாக 25 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இங்கு ஆட்சியமைப்பதற்கு 13 உறுப்பினர்கள் தேவைப்படுகின்ற நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கவுள்ளது என்று நேற்று தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் ஆதரவளிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

மேயராக பரிந்துரை செய்யப்பட்ட கந்தசாமி செல்வராசா கருத்து தெரிவிக்கையில்,

என்னை மேயராக பரிந்துரை செய்து தெரிவுசெய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு எனது வட்டார மக்களுக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன்.

அத்துடன் மாநகர மேயர் பதவியின் பின் திருகோணமலை நகர அபிவிருத்திக்காக சமமான வள பங்கீடு மூலமாக அபிவிருத்தி திட்டங்களை திறம்பட முன்னெடுக்கவும், அனுபவம் மூலமாக எதிர்கால திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் எனது சேவைக் காலத்தின் போது செயற்படுவேன் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply