
கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோ ஆகியோர் வெலிக்கடை சிறையில் பொதுவான கைதிகள் வைக்கப்படும் பொது அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி இருவருக்கும் சிறைச்சாலை உடை அணிவிக்கப்பட்டு, தூங்குவதற்கு பாய் மற்றும் தலையணை வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, சதொச ஊடாக 14,000 கேரம் பலகைகளை கொள்வனவு செய்ததன் மூலம் 53 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு குற்றம் சுமத்தியிருந்தது.
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல், இலஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் பிரிவு 70 இன் கீழ் இரண்டு பிரதிவாதிகள் மீதும் இந்த வழக்கைத் தாக்கல் செய்தார்.
இதற்கான வழக்கு விசாரணை நேற்று (29) மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த இருவரும் குற்றவாளிகள் என தெரிவித்து சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் வர்த்தக அமைச்சருமான நளின் பெர்னாண்டோவுக்கு 25 வருட கடூழிய சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் விதித்து மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதுதவிர பிரதிவாதிகளான நளின் பெர்னாண்டோவுக்கு 4 இலட்சம் ரூபாய் அபராதமும், மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு 2 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.
தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் இருவரும் நேற்று (29) பிற்பகல் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு இருவரும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் பொதுவான கைதிகள் வைக்கப்படும் பொது அறைக்கு அனுப்பப்பட்டனர்.
மேலும், நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகளுக்கு வழங்கப்படும் “ஜம்பர்” உடை இருவருக்கும் அணிவிக்கப்பட்டதாக சிறைச்சாலை பேச்சாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.
இதற்கிடையில், இன்றைய தினம் (30) அவர்களுக்கு சிறைச்சாலைக்குள் பணி வழங்கப்படவுள்ளதாகவும், பெரும்பாலும் இருவரும் வெலிக்கடை சிறைச்சாலையின் அச்சகப் பிரிவில் பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.