நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை- பல குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல குடும்பங்களைச் சேர்ந்த நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (29) மாலை முதல் இலங்கையின் பல பகுதிகளில் கடுமையான மழைவீழ்ச்சியும், பலத்த காற்று நிலையும் பதிவாகியுள்ளது.

இதன் காரணமாக, தற்போது 485 குடும்பங்களைச் சேர்ந்த 1,757 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன்படி, 9 மாவட்டங்களில் மழை மற்றும் காற்று நிலைகளால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது, 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், மேலும் 365 வீடுகளுக்கு பகுதியளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காற்று நிலையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பல வீதிகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நேற்று (29) இரவு ஏற்பட்ட கடுமையான காற்று மற்றும் மழை காரணமாக மரங்கள் விழுந்ததாக பதிவாகிய நிலையில், இதனால் மின்கம்பிகளுக்கு சேதம் ஏற்பட்டு கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை பலத்த மழைவீழ்ச்சி மற்றும் காற்று தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் ஆம்பர் நிற எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.

நாளை (31) முற்பகல் 08.00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அதிகரித்த தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி காற்று நிலைமை காரணமாக மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக பொது மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் வசிப்பவர்கள் மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply