
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு இரணைப்பாலைப் பகுதிகளில் சுகாதார சீர்கேடான முறையில் இயங்கிய வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு இரணைப்பாலைப் பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள் சுகாதார சீர்கேடான முறையில் இருப்பதாக பொதுமக்களால் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகர்களினால் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, ஒரு வர்த்தக நிலையத்தில் காலாவதியான வண்டுமொய்த்த உணவு பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
அதனையடுத்து குறித்த நிலைய உரிமையாளர் நேற்று (30) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவருக்கு 7500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
அத்துடன் இரணைப்பாலை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள், பொலித்தீன் பைகள் மற்றும் ஏனைய கழிவுப் பொருட்கள் முதலானவற்றை வீதியோரங்களிலும், வாய்க்கால்களிலும் வீசிய வர்த்தகர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதன்போது குறித்த வர்த்தகருக்கு 25,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
குறித்த சோதனை நடவடிக்கையானது கோம்பாவில் சுகாதார பரிசோதகர் ஆ.சுரேஸ் ஆனந்தன், புதுக்குடியிருப்பு பொது சுகாதார பரிசோதகர் கோகுலன் ஆகிய அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.