தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை கடலில் புதைக்க தீர்மானம்!

இலங்கை கடலில் எல்லை மீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 123 இந்திய ரோலர் படகுகளை கடலில் புதைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்தொழில் நீரியல் வள திணைக்கள யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடற்தொழில் விடயதானங்களின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் கடற்தொழில் நீரியல் வள திணைக்கள யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் தெரிவிக்கையில்,

சுமார் 3 தொடக்கம் 4 வருடங்களாக எல்லை மீறி நுழைந்த இந்திய ரோலர் படகுககள் யாழ். மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

இந்தப் படகுகள் தரித்து நிற்பதால் உள்ளூர் மீனவர்கள் தமது படகுகளை கட்டுவதில் பாரிய இடர்பாடுகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால் குறித்த படகுகளை கடலில் புதைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், கடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உபகரணங்களை குறித்த ரோலர் படகுகளிலிருந்து அகற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்ததும் கடலில் புதைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply