அவுஸ்திரேலிய பிரதி பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ரிச்சட் மார்லஸ் இன்று (03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலிய துணைப் பிரதமர் உட்பட 15 பேர் கொண்ட குழு நேற்று (02) இரவு அந் நாட்டு பாதுகாப்பு அமைச்சுக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களின் வருகையை வரவேற்க பொது பாதுகாப்பு துணை அமைச்சர் சுனில் வட்டகல உள்ளிட்ட இலங்கை அதிகாரிகள் குழு அவர்களை விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றதாக கூறப்படுகின்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதும், ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் இந்தப் பயணத்தின் நோக்கமாகும் என்று வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின் போது ரிச்சட் மார்லஸ், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்திக்க உள்ளார்.
அத்துடன் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகரவுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளார்.
இலங்கை விஜயத்தைத் தொடர்ந்து, இந்த குழு இந்தியாவுக்குப் புறப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



