யாழ். அரியாலை – செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தில் நேற்று வரையில் 7 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி – சித்துபாத்தி மயானத்தில், கடந்த பெப்ரவரி மாத ஆரம்பத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக குழிகள் வெட்டப்பட்டபோது அதற்குள் இருந்து மனித எச்சங்கள் தென்பட்டன.
இதனைத் தொடர்ந்து அங்கு அகழ்வுப் பணிகள் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டு அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றது.
ஏற்கனவே அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு இரண்டு உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக அகழ்வு பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.
குறித்த பணிகள் நேற்று மீண்டும் ஆரம்பமான நிலையில் மேலும் ஐந்து மனித உடல் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
நேற்று அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளில் 14 வயது மதிக்கத்தக்க சிறுமியின் எலும்புக்கூடும் காணப்படுகின்றது.
இங்கு அதிகளவான மனித எச்சங்கள் காணப்படலாம் என கருதப்படுகின்ற நிலையில் குறித்த பகுதியில் தொடர்ந்தும் அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஒரு பகுதியில் மூன்று மனித மண்டையோடுகளுக்கு மேல் அடையாளம் காணப்பட்டால் அதனை மனிதப் புதைகுழி என பிரகடனப்படுத்த முடியும் என்ற நிபந்தனைக்கமைய குறித்த பகுதியை மனிதப் புதைகுழியாக பிரகடனப்படுத்துமாறு கோரி யாழ்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவானிடம் விண்ணப்பத்தை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


