கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு ஜூன் 16 ஆம் திகதி நடைபெறும் என்று மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தரவால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கொழும்பு மாநகர சபையின் முதலாவது அமர்வு ஜூன் 16ஆம் திகதி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
கொழும்பு மாநகர சபையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் முதல் அலுவலாக புதிய மாநகரசபை மேயர் மற்றும் பிரதி மாநகரசபை மேயர் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கொழும்பு மாநகர சபையில் எந்தக் கட்சியும் முழுமையான பெரும்பான்மையைப் பெறாத நிலையில், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரண்டும் மாநகரசபை மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கு பிற அரசியல் குழுக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளன.
அத்துடன் மேலும் 20 உள்ளூராட்சி நிறுவனங்களின் கன்னி அமர்வுகள் ஜூன் மாதத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்ட்டுள்ளதாக மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
