யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மயானத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகள் சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையின் கீழ் சர்வதேச நியமங்களுக்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ் நகர நுழைவாயில் – நாவற்குழி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
போராட்டத்தின் போது,
செம்மணி புதை குழிக்கு நீதி வேண்டும்,
மறைக்காதே மறைக்காதே புதை குழிகளை மறைக்காதே,
எங்கே எங்கே உறவுகள் எங்கே,
இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை வேண்டும்”
என கோஷமிட்டவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
செம்மணி- சித்துப்பாத்தி இந்துமயான மனிதப்புதைகுழியில் இருந்து ஒரு சிசுவின் என்புத்தொகுதி உட்பட இதுவரை 13 என்புத்தொகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

