திருகோணமலை – திருக்கடலூர் பகுதி மீனவர்கள் இன்று வீதிமறியல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
திருகோணமலை – திருக்கடலூர் மீனவ சங்கத்தைச் சேர்ந்த மீனவர்களின் படகு வாழைச்சேனை பகுதியில் வைத்து சேதம் அடையச் செய்து, மீனவர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கான உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தை மீனவர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
போராட்டத்தின் போது,
மீனவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?,
நாங்களும் இந்த நாட்டுப் பிரஜைகளே,
மீனவனின் குரல் அரசுக்கு கேட்காதா?,
மீனவனின் உயிருக்கு உத்தரவாதம் இல்லையா?
உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியமாறும், பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்களின் வீதிமறியல் போராட்டம் காரணமாக சில மணி நேரம் வீதிப் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததுடன், போராட்ட இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
அத்தோடு குறித்த இடத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன வருகை தந்து மீனவர்களோடு கலந்துரையாடி உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.



