யுத்த காலப்பகுதியில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்குரிய ஆவணங்களை உரியவர்கள் உறுதிப்படுத்தினால் அவர்களுக்கு நகைகள் வழங்கப்படும் என சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
எனினும் நகை தொடர்பான ஆவணங்களை உறுதிப்படுத்தாவிடின் கைப்பற்றப்பட்ட நகைகளின் ஒரு தொகை வடக்கு பொது அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படும் என்றும், இதற்காக பொது நிதியம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
யுத்த காலத்தின் போது வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகள் ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய சட்ட நடவடிக்கைகள் ஊடாக பொலிஸ் திணைக்களத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த தங்க நகைகள் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையால், அவற்றின் அறிக்கை பெற்றுக்கொள்வது அவசியமாகும். அறிக்கை கிடைத்ததன் பின்னர், அவற்றை உரியவர்களுக்கு ஒப்படைப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும்.
வடக்கு அபிவிருத்திக்கு இந்த தங்க நகைகளின் ஒரு தொகையையும், அரசாங்கத்தால் ஒரு தொகையும் வைப்பிலிடப்படும்.
வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இந்த அபிவிருத்தி திட்டத்தில் பங்குப்பற்றுவதற்கான வாய்ப்பளிக்கப்படும் என்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
