நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட முறைப்பாட்டை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழுவிலிருந்து கயந்த கருணாதிலக்க விலகியுள்ளார்.
இன்றைய (06) நாடாளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இதனை அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கைகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை கருத்தில் கொண்டு, அதனை விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக கடந்த மே 20ஆம் திகதி நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தலைமையில் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.
குறித்த விசாரணைக்கு குழுவில், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர தலைவராகவும், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.
தற்போது இந்த விசாரணைக்கு குழுவில் இருந்து கயந்த கருணாதிலக்க விலக, அவருக்குப் பதிலாக நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அறிவித்தார்.
