அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் இன்று (09) அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அரச கால்நடை வைத்தியர்களுக்கான தனியான யாப்பை அரசாங்கம் அமுல்ப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அதனைத் தொடங்கத் தவறியது உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, இன்று காலை 6 மணிக்கு இந்த வேலைநிறுத்தம் ஆரம்பமானது.
இன்று காலை 6.00 மணி முதல் 24 மணி நேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச கால்நடை மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் கால்நடைகளுக்கான சிகிச்சை சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய நான்கு கால்நடை வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் கால்நடை வைத்தியர்கள் சமூகம் அளிக்காமையால் வைத்திய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கால்நடைகளை சிகிச்சைக்காக அழைத்து வந்தவர்கள் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
