வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் தவிசாளராக இலங்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த குமாரசாமி சுரேந்திரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் புதிய தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளரை தெரிவு செய்வதற்கான கூட்டம் , வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நேற்று (17) நடைபெற்றது.
32 உறுப்பினர்களைக் கொண்ட வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்காக நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 6 ஆசனங்களையும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி 4 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 2 ஆசனங்களையும் கைப்பற்றியது.
புதிய தவிசாளர் தெரிவு செய்யும் பொருட்டு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தேசிய மக்கள் சக்தி வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் இரகசிய வாக்கெடுப்புக்கு எதிராக வெளிநடப்பு செய்வதாக அறிவித்தார்.
32 உறுப்பினர்களில் 25 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்றதுடன் 7 பேர் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட குமாரசாமி சுரேந்திரன் 13 வாக்குகளைப் பெற்று தவிசாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்னர் உப தவிசாளர் தெரிவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட தியாகராசா தயாபரன் உப தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.
