செம்மணி மனித புதைகுழிக்கு நீதியான விசாரணை நடாத்தபட வேண்டும் எனவும் உண்மை கண்டறியபட வேண்டும் எனவும் கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் இன்றையதினம் (20) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
யாழ். அரியாலை, செம்மணி பகுதியில் மனித எச்சங்கள் பல மீட்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பில் நீதியான விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனக் கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதன்படி இன்றையதினம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர், பொதுமக்கள், மதகுரு தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள்,
மூன்று மாதப் பிஞ்சு குழந்தையை மூச்சு அடக்க கொன்றுபுதைத்தது ஏன்?
சிந்துபாத்தியில் சிந்தப்பட்ட இரத்ததிற்கு நீதி எப்போது?
காணாமல் போனவர்கள் நினைவாக செம்மணியில் நீதிக்காக நிற்கிறோம்
பதுக்கப்பட்ட உண்மை வெளிக்கொணர வேண்டும்
நீதி வேண்டும் நீதி வேண்டும் செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டும்,
இது மண்ணல்ல புதை உண்மை அதை தோண்டி காட்டுவோம்,
ஐநா செவி கொடு ஜனாதிபதி கண்விழி
மனித உரிமையை பாதுகாப்பீர்,
புதைகுழிகள் அடைக்கலம் அல்ல உண்மை பேசும் தளங்கள்,
விசாரணையை துரிதபடுத்து,
செம்மணிக்கு ஒரு நீதி பட்டலந்தவுக்கு ஒரு நீதியா
முதலான கோஷங்களை எழுப்பிய வண்ணமும், பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது அதிகளவான பொலிஸாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
செம்மணி சித்துபாத்தி மயான புதைகுழி அகழ்வில் இதுவரையில் மொத்தமாக 19 முழுமையான மனித என்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இம்மாதம் 26ஆம் திகதி இரண்டாம் கட்ட அகழ்வுப் பணி ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
