ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் நேற்று (19) பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட 44 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக அகற்றுவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பகதொலுவ பகுதியில் நடாத்தப்பட்ட இந்த இந்த சோதனை நடவடிக்கையின் போது, அங்கு 115 வாகனங்கள் திடீர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன.
தரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து சேவையைப் பராமரித்தல் மற்றும் வீதி விபத்துகளைக் குறைத்தல் ஆகிய நோக்கங்களுக்காக குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது அதிகப்படியான புகை வெளியேற்றம் கொண்ட வாகனங்கள் மற்றும் குறைபாடுகள் மற்றும் செலுத்துவதற்கு தகுதியற்ற வாகனங்கள் தற்காலிகமாக சேவையிலிருந்து அகற்றப்பட்டன.
மேலும் இந்த வாகன சோதனையின் போது, பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த உதிரிபாகங்களை அகற்றுமாறும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சேவையிலிருந்து தற்காலிகமாக தடைசெய்யப்பட்ட வாகனங்களில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உட்பட 15 பேருந்துகளும் அடங்கியுள்ளன.
தற்காலிகமாக இயக்கத் தடை செய்யப்பட்ட வாகனங்களின் வருடாந்திர வாகன வருமான உத்தரவு பத்திரங்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்களினால் பொறுப்பேற்கப்பட்டதுடன், வாகனங்கள் பழுதுபார்க்கப்பட்டு இந்த மாதம் 30ஆம் திகதி வாகனங்கள் சோதனை செய்யப்பட்ட அதே இடத்திற்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் சோதனை செய்யப்பட வேண்டும்.
நுவரெலியா மாவட்ட தலைமை மோட்டார் வாகன ஆய்வாளர் ஜாலிய பண்டாரவின் வேண்டுகோளின் பேரில், மோட்டார் வாகனத் திணைக்களத்தின் வாயு உமிழ்வு ஆய்வுப் பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து திணைக்களத்தின் மோட்டார் வாகன ஆய்வாளர் எம்.எஸ்.எல். சந்தன பண்டார கண்காணிப்பில் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கினிகத்தேனை பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் விராஜ் விதானகே மற்றும் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் பங்கேற்றிருந்தனர்.
