பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் Marc Andre Franche உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) பிரதிநிதிகளிடையே நேற்று (20) நாடாளுமன்றத்தில் சந்திப்பொன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிரதிநிதி Andreas Karpati, பிரதம மந்திரியின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸ் ஆகியோர் பங்கேற்றனர்.
இதன்போது ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தால் வழங்கப்பட்டுள்ள திட்ட முன்மொழிவுகள் தொடர்பான எதிர்கால வேலைத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான குழுவின் அறிக்கை தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்திலிருந்து உதவி வழங்கத் தயாராக இருப்பதாக யுனிசெஃப் பிரதிநிதிகள் இதன்போது வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
