வவுனியா – செட்டிக்குளம் பிரதேசத்திற்குட்பட்ட கனேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயம் பாடசாலையில் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த போராட்டம் பாடசாலை அதிபரை இடமாற்றம் செய்ய வேண்டும், உயர்தர பாடங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், பாடசாலையில் நன்றாக கற்பிக்கும் ஆசிரியர்களை இடமாற்றம் செய்யக்கூடாது முதலான பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா – செட்டிக்குளம் பிரதேசத்திற்குட்பட்ட கனேசபுரம் சண்முகானந்தா வித்தியாலயத்தில், விஞ்ஞான பாடம் மற்றும் தமிழ் பாடங்களுக்கான ஆசிரியர்கள் இரண்டு வருடங்களாக நியமிக்கப்படவில்லை என்பதுடன் பாடசாலைக்கு ஒழுங்கு முறையான தளபாடங்களை இல்லாமல் உள்ளது.
இதன் காரணமாக மாணவர்கள் மிகக் குறைந்தளவிலான புள்ளிகளையே பெற்று வருகின்றனர். எமது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது. இதற்கு பாடசாலையின் ஒழுங்கற்ற அதிபரே காரணம் என பெற்றோர்கள் குற்றஞ்சாட்டினர்.
போராட்டத்தின் போது மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் பிறகு வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து மாணவர்களின் நலன்கருதி உங்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என எழுத்துமூலம் வாக்குறுதி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் கலைந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
