ஐ.நா சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் கவனத்தை பெற்ற போராட்டம்!

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இன்றையதினம் (25) திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவருடைய கவனத்தை ஈர்க்கும் முகமாக அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐ.நா சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் திருகோணமலை -ஜுப்லி மண்டபத்திற்கு விஜயம் மேற்கொண்டு சிவில் செயற்பாட்டாளர்களை சந்திப்பதற்க்கு வருகை தந்திருந்தார்.

இந்தவேளையில் அவருடைய கவனத்தை ஈர்க்கும் முகமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கம், சிவில் அமைப்புக்கள் மற்றும் வடக்கு கிழக்கு சமூக இயக்கம் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோரை மனித உரிமை உயர்ஸ்தானிகர் சந்தித்து கலந்துரையாடியதோடு அவர்களிடமிருந்து மகஜர்களையும் பெற்றுக் கொண்டார்.

போராட்டத்தின் போது,

இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடைபெற்ற இன அழிப்பை (Genocide) விசாரித்து குற்றவாளிகளை வழக்குப் பூர்வமாக தண்டிக்க ஒரு சர்வதேச குற்றவியல் நீதித்துறை முறைமை அமைக்கப்பட வேண்டும்.

செம்மணி, கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட கூட்டு மனித புதை குழி விடயம் தொடர்பாக சர்வதேச நீதிமன்ற மற்றும் நிபுணத்துவ குழுக்களுக்கு அணுகுவதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் (ICC), அல்லது சர்வதேச நீதிமன்றத்திற்கும் (ICJ) – போர் குற்றங்கள், மனிதத்துக்கு எதிரான குற்றங்கள், மற்றும் இன அழிப்பு குற்றங்கள் ஆகியவற்றுக்காக பரிந்துரை செய்ய வேண்டும்.

தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழும் பிரதேசங்களில் அரசால் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்புகளை உடனடியாக நிறுத்தி, உரிய உரிமையாளர்களுக்கு நிலங்களை மீளளிக்க வேண்டும்.

தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு தளங்களை அழிக்கும் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா?

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உயர் ஆணையாளர் அலுவலகம் (OSLAP) நடத்திய இலங்கை பொறுப்புக்கூறும் திட்டம் – 1948இல் தொடங்கிய தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறையின் மற்றும் இன அழிப்பின் முழு வரலாற்றையும் உள்ளடக்கி அறிக்கையிட வேண்டும்.”
போன்ற கோரிக்கைகளை முன்நிறுத்தி அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply