யாழ். செம்மணி மனிதப்புதை குழியில் இடம்பெற்றுவரும் ‘அணையா தீபம்’ போராட்டத்தின் இறுதி நாளான இன்று பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்ட பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் உள்ளிட்டோர் வருகைத் தந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து சாணக்கியன் உள்ளிட்ட சிலர் வெளியேறிச் சென்றனர்.
இதேவேளை, இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானமும்
சென்றிருந்த நிலையில் போராட்டக்காரர்கள் அவரை அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்றினர்.
செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம் என மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
யாழ். செம்மணி மனிதப்புதை குழியில் மீட்கப்படும் உறவுகளுக்கு நீதி வேண்டி கடந்த 23ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘அணையா தீபம்’ போராட்டத்தின் இறுதி நாளான இன்று (25) பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைபெற்று வருகின்றது.
இன்று காலையில் அகவணக்கம் செலுத்தி மலரஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்தும் அணையா விளக்குப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இதேவேளை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளர் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளார். இதன் போது ஐ.நா ஆணையாளர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
மேலும் அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று போராட்டத்தின் மகஜரொன்றும் ஆணையாளரிடம் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
