பொலனறுவையில் அரச பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஊழியர்களிடையே மோதல்- 5 பேர் காயம்!

பொலனறுவையில் அரச பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஊழியர்களிடையே ஏற்பட்ட மோதலினால் 5 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறையிலிருந்து பொலன்னறுவை டிப்போவிற்கு வந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து, தனியார் வகுப்புகளில் கலந்து கொள்ளும் மாணவர்களையும், வழியில் பருவச் சீட்டுகளைப் பெற்றவர்களையும் ஏற்றிக்கொண்டு சென்றதால், தனியார் பேருந்துகளில் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததன் காரணமாக இந்த மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மாத்தறையிலிருந்து வந்த அரச பேருந்தில் டிப்போ முகாமையாளர் இருந்துள்ளதுடன், பொலன்னறுவை டிப்போவிற்கு முன்னால் பேருந்து கடக்கும்போது தனியார் பேருந்து சாரதி டிப்போ முகாமையாளரைத் தாக்கியதால் மோதல் அதிகரித்தது.

பின்னர் டிப்போவில் இருந்த அதிகாரிகள் குழு தனியார் பேருந்து சாரதி மற்றும் நடத்துனரை தாக்கியுள்ளனர்.

இந்த மோதலில் இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ முகாமையாளர் உட்பட மூன்று ஊழியர்களும், தனியார் பேருந்து ஊழியர்கள் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

பொலன்னறுவை மாவட்டத்திலும், நீண்டதூர பயணங்களுக்காகவும் சுமார் 135 இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாகவும், மேற்படி தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (26) பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப் போவதாகவும் டிப்போ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தற்போது பொலன்னறுவை டிப்போவில் பல பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதுடன், பிரதான வாயில் மூடப்பட்டுள்ளது. இதனால் ஊழியர்கள், பேருந்துகள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பு பொலிஸாரினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஷான் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply