தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்ட மீன்பிடி படகும், மொரகல்ல பகுதியில் இருந்து புறப்பட்ட மீன்பிடி படகும் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று மாலை (27) இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை தெவுந்தர மீன்பிடி துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட படகில் 5 மீனவர்கள் இருந்துள்ளனர்.
குறித்த படகு ஒரு வணிகக் கப்பலுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
எனினும் விபத்தில் சிக்கியவர்களில் ஒரு மீனவர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டதுடன், ஏனைய நால்வரும் காணாமல் போயுள்ளனர்.
இதேவேளை, களுத்துறையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்குச் சென்ற மீன்பிடி படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு மீனவர்கள் காணாமற் போயுள்ளனர்.
இந்தநிலையில் காலி மற்றும் களுத்துறை கடற்கரைகளில் இரண்டு விபத்து சம்பவங்களில் காணாமற்போன மீனவர்களை தேடும் பணிகளை கடற்படை தொடர்ந்தும் முன்னெடுத்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கடற்படைக்கு தகவல் அளித்த பின்னர், காணாமல் போனவர்களை கண்டறிவதற்காக விசேட படகொன்று சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கடலில் விபத்துக்குள்ளான இரண்டு மீன்பிடி படகுகளில் இருந்து மீனவர்களை மீட்பதற்காக பெல் 412 ஹெலிகொப்டரை பயன்படுத்துமாறு விமானப்படைக்கு பாதுகாப்பு செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் மீன்பிடி படகில் இருந்த காணாமல் போன நான்கு மீனவர்களில் இருவரின் சடலங்கள் இலங்கை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளன.
